சந்திர பகவானின் பிறப்பு

சந்திர பகவானின் பிறப்பு

சந்திர பகவானின் பிறப்பு, அத்ரி முனிவர் மற்றும் அவரது மனைவி அனுசுயாவிடமிருந்து துவங்குகிறது.

அத்ரி முனிவர்பிரம்மாவின் மானசபுத்திரன். அவரது மனைவி அனுசுயா, கற்பும், ஒழுக்கமும் நிறைந்த மனைவி. அவர்கள் திருமணம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை இல்லாத தம்பதியினர். இவர்களது குழந்தை பிறப்பு ஒரு புனிதமான கதை.

அக்காலங்களில் முனிவர்களும், தவசிகளும் இல்லற வாழ்க்கையுடன் இணைந்தே தமது தவ வாழ்க்கையையும் நடத்தினர்.

தாம்பத்யம் யாது, அதன் நோக்கம் என்ன, எப்போது எந்த எண்ணங்கள் வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்ட வாழ்க்கை முறை, கட்டுப்பாடு மட்டுமே மனிதனை வாழ தகுதிடையவனாக மாற்றுகிறது.

வாழ்வில் அனைத்து எண்ணங்களும் வேண்டும், எண்ணங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வாழ்க்கை சிறப்பாகும்.

அனுசுயாவின் வேதனை

ஒரு நாள் தனது காலை வழிபாடுகளை முடித்து, அத்ரி முனிவர் தனது ஆசிரமத்திற்கு திரும்புகிறார். குளிர்ந்த நீர் கோப்பையை தனது கைகளில் ஏந்தி கொண்டு கணவனின் வருகைக்காக காத்து கொண்டிருக்கும் தனது மனைவியின் அன்பான முகத்தை பார்த்து பூரித்து, நீர் கோப்பையை கையில் பெற்று மனைவியை பார்த்து அன்போடு சிரிக்க, பதில் சொல்ல முடியாத மனைவியின் விழிகள் சோகத்தில் குளமாக மாறியிருந்தன.

வேதனையை புரிந்த அத்ரி முனிவர் உதவியற்ற நிலையில் பெருமூச்சு விட்டு, மனைவியின் முகத்தை பார்க்க, அவரது மென்மையான உதடுகளில் இருந்து சோக வார்த்தைகள் உதிர்த்தன.

சுவாமி தினமும் நான் எல்லா தெய்வங்களையும் வணங்கி, என் பிரார்த்தனையை வைத்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்னும் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.“என்ன தவறு நான் செய்தேன்”என எனக்கு விளக்கம் அளியுங்கள் சுவாமி, என்றாள்.

“அனுசுயா”,  எனது தந்தை பிரம்மா, நமக்கு அளித்த வரம் எனக்கு நினைவில் இருக்கிறது. நமக்கு கட்டாயம் குழந்தை செல்வம் உண்டு.தாங்கள் சற்றே பொறுமை காத்தால் மட்டுமே போதுமானது என்று மனைவியை ஆறுதல் படுத்துகிறார்.

தனது கணவரின் நம்பிக்கையான வார்த்தைகளில் சற்றே மனமாற்றம் கொண்டு அனுசியா தனது பணிகளை தொடர்கிறார்.

பதிவிரதை சீலாவதி

அதே நேரத்தில், அனுசுயாவிற்கு ஈடானமற்றொரு பதிவிரதையின்  கதையையும் அறிய வேண்டி உள்ளது. சந்திர பகவானின் பிறப்பிற்கு வித்திடும் வகையாய், அனுசுயாவை தனது மானசீக தாயாய் எண்ணி வாழ்ந்து வரும் மற்றொரு பெண்.

இளமையானவள், அறிவானவள், அன்புள்ளம் கொண்ட பேரழகி, பொறுமை கொண்ட பூதேவி, கணவனைத் தவிர வேறு ஒரு ஆண்மகனை  கண்ணிலும் காணாத கற்புள்ளம் நிறைந்த கன்னி.அவளது கணவன்,  வயதான, தொழு நோய் கொண்ட, கை கால்கள் வலுவற்று நடக்கவும் இயலாத ஒரு முதியவர். ஆயினும் அப்பெண் தனது கணவரின் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவள். அவனோடு வாழ்க்கை நடத்திக் கொண்டு வரும் அந்த துரதிரஷ்ட பெண்ணின் பெயர் ஷீலாவதி.

தன் கணவனை தனியாக விட்டு வேறு எங்கும் வெளியில் வேலை செய்து பிழைப்பு நடத்த முடியாத காரணத்தினால், தனது கணவனை தலையில் சுமந்து, அனுதினமும் பிச்சை எடுத்து, அதில் வரும் பணத்தில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அபாக்யவதி. அந்நிலையிலும், தகுதியற்ற  கணவனை கைவிடாது கடவுளாக தொழும் ஒரு அற்புதப் பெண்.

அன்றொரு நாள், அமாவாசை இரவு, பிச்சை எடுத்து முடித்து, வீட்டிற்கு  திரும்பி, குளித்து முடித்து,எந்த அலங்காரமும் இல்லாமல், தான் கொணர்ந்த பணத்தில், தனது கணவனுக்கு அன்பாக உணவு சமைத்து வந்து, தடுமாறிய விளக்கொளியின் மங்களான வெளிச்சத்திலும், பவுர்ணமி நிலவாக ஒளிரும் முகத்தோடு, தன் கணவன் முன் நின்றாள்..

அற்ப வெளிச்சத்திலும் அவள் தேவதையாக தோன்றினாள். அந்த பிரகாசமான முகம், கட்டழகிற்கு காரணம், அவளது நற்குணமா? நல்லொழுக்கமா? பக்தியா? அல்லது கணவன் மீது கொண்ட அன்பா? என பார்ப்பவரை கேள்வி கேட்க வைக்கும் அழகு.

சமைத்த உணவோடு, கணவன் முன் நின்ற அவளை, மிகுந்த வெறுப்போடு எதிர் நோக்கினான் கணவன்.  காரணம் கணவனின் மீது பக்தியை மட்டுமே செலுத்தும் அந்த பெண்ணிற்கு அவன் மீது காம எண்ணம் இல்லை. காமம் நிறைவேறாத காதல் கணவனுக்கு வெறுப்பாக இருந்தது. மேலும்  அவனுடைய இயலாமை எண்ணம் மற்றும் உடல்நல குறைவு, மிகையாக கூடி, மிகுந்த வெறுப்புடன், தனது மனைவியை, அனுதினமும் அவஸ்தை செய்து கொண்டே இருக்கும் கணவனாக அவனை மாற்றியது.

moon birth story

கணவனின் கடுமையான வார்த்தைகள்

சமைத்த உணவை சீக்கிரம்உண்ணுமாறு, அவள் தனது கணவனை வேண்ட, அவனோ! தீய வார்த்தைகளால்,“எனக்கு அவசர அவசரமாக உணவு கொடுத்து தூங்க வைத்துவிட்டு, நீ எவனை காண ஆயத்தமாக உள்ளாய்” என கேட்க, அவள், “சுவாமி, தங்களைத் தவிர வேறு ஒரு ஆண்மகனை, என்  கண்ணிலும் காணேன், கனவிலும் நினையேன் என்றாள்.

பதிலுக்கு அவனோ, “ நீ! அனுதினமும் பிச்சை எடுத்துக் கொண்டு வரும் வேலையில், நகரத்தில் ஒரு இல்லத்தை வெறித்து பார்த்து, அங்கு மட்டும்  யாசகம் கேட்காமல்,கடந்து வருகிறாய். அங்கு எவன் இருப்பதால்,உன்னால் யாசகம் கேட்க மனமில்லாமல் கடந்து வருகிறாய்?” என்றான்.

அவளோ, “ஐயோ! சுவாமி, தாங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள். அது ஒரு வேசியின் வீடு. எந்நிலையிலும் வேசியிடம் யாசகம் பெறுவது,  கூடாது என்பதால் தான், நான் அந்த வீட்டை தவிர்த்து வருகிறேன். வேறு எந்த காரணமும் இல்லை” என்றாள்.

வேசி என்ற வார்த்தையை கேட்டவுடன், கணவனின் மனதில் காம எண்ணம் குடி கொண்டது. “ என்ன? வேசியின்  வீடா? அப்படியென்றால்,பல ஆண்டுகளாக எனக்குள் எரியும் காமத் தீயிற்கு அவளால் மட்டுமே உணவளிக்க முடியும். உடனே, என்னை அவளிடம் அழைத்து செல்” என்றான்.

“சுவாமி, உங்களுக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு உள்ளது. இந்நிலையில், இவ்வாறு எந்த செயலிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பது வைத்தியரின் கட்டளை. தாங்கள் இந்நிலையிலிருந்து விரைவில் மீண்டு, நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம், தயை கூர்ந்து இந்த எண்ணத்தை கை விடுங்கள் சுவாமி” என்றாள்.

“மனைவி என்ற உறவிற்கு சற்றும் தகுதி இல்லாத உன்னை மணந்து, எந்த சுகமும் காணாமல் நீண்ட காலம் வாழ்வதற்கு, ஒரே ஒரு நாள் அவளுடன் ஆனந்தமாக இருந்துவிட்டு இறந்து போகிறேன் பரவாயில்லை. உனக்கு வேறொரு ஆண் மகனின் நினைப்பு இல்லை என்பது உண்மையாக இருந்தால், என்னை உடனே அவளிடம் அழைத்து செல்! என்றான்.

“சுவாமி! அவ்வாறு தாங்கள் எண்ணினால் நான் அழைத்து செல்கிறேன், ஆனால், அவளுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை. நமது நிலையை தாங்களே அறிவீர்கள். பிச்சை எடுத்த பணம் நமது உணவிற்கு மட்டுமே போதுமாக இருக்கிறது. அன்றாடம் பிச்சை எடுத்து அன்றாடம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும், என்னிடம் அதற்கான பணம் இல்லை சுவாமி!  என்று வருத்தத்தை தெரிவிக்க, கணவன், “பிச்சை எடுக்கும் நீ அவள் காலிலும் விழுந்து, கணவனுக்காக இந்த பிச்சை கேட்டால், எதுவும்  குறைந்து போகாது, கணவனை திருப்தி படுத்தாத நீ, வேசியிடம் யாசகம் கேட்க தகுதியானவளே! நீ இப்போதே, அவளிடம் என்னை அழைத்து சென்றே ஆக வேண்டும், இது என் கட்டளை!என் கட்டளையை  தவறினால், நீ பதிவிரதையாக இருக்க முடியாது. உனக்கு சாபம் அளித்திடுவேன்” என பிதற்ற, கணவனின் வாக்கை வேதவாக்காக எண்ணி, அமாவாசை இரவில்,வேறு வழியில்லாமல், கனத்த மனதோடு, கணவனை கூடையில் அமர்த்தி, தலையில் சுமந்து, வேசியின் வீட்டை நோக்கி நடக்கிறாள் அந்த பதிவிரதை.

மாண்டவிய முனி

இக்கதை சற்றே மாண்டவிய முனிவரை நோக்கி நகற்கிறது. இக்கதை நடக்கும் அதேகாலகட்டத்தில் நடந்த மற்றொரு நிகழ்வு.

மாண்டவிய முனிவர் ஒரு தவ புத்லவர். நீண்ட காலமாக கையை உயர்த்தி, ஒரு காலில் தவமிருந்து கொண்டிருந்தார். தன்னை சுற்றி நடப்பதறியாது தவம் செய்து கொண்டிருந்த வேலையில், ராஜாவின் அரண்மனையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், ஆசிரமத்தில் எவரும் இல்லாத நிலையை சாதகமாக்கி, கொள்ளையடித்த பொருட்களை ஆசிரமத்தில் மறைத்து வைத்து, அங்கிருந்து தப்பி ஓடினர்.

கொள்ளையர்களை விரட்டி வந்த ராஜாவின் காவலர்களிடம் சிக்கி கொண்டனர். கொள்ளையடித்த பொருட்கள் ஆசிரமத்திலிருந்து மீட்க பட்டது, தண்டனையிலிருந்து தப்பிக்க, மாண்டவ்ய முனிவரின் பெயரையும் கூற, தவத்திலிருந்த முனிவரும் கைது செய்து அரண்மனைக்கு இழுத்து வரப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட முனிவரிடம் ராஜா கேள்விகளை கேட்க,பதிலளிக்காமல் மௌணமாக இருந்து விடுகிறார். முனிவருக்கும் இதில் சம்பந்தம் உண்டு என்று தவறாக நினைத்து, திருடர்களோடு சேர்த்து, அவருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. கூறிய வேல்முனையில் செங்குத்தாக, சாகும் வரை நிறுத்த வேண்டும் என்ற தண்டனை வழங்கப்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்பட்ட சில நேரத்திலேயே திருடர்கள் உயிரை விட, முனிவர் மட்டும், வலியில் அதே நிலையில், உயிர் பிரியாத அவஸ்தையில் இருக்கிறார்.

மாண்டவிய முனி அளித்த சாபம்

அவ்வாறான அந்த அமாவாசை இரவில், கணவனை தலையில் சுமந்து, இருட்டில், வேசியின் வீட்டிற்கு பயனித்து கொண்டிருக்கும் அபலை ஷீலாவதி மற்றும் அவளது கணவன், அந்த இடத்தை கடக்கும் போது, கணவனின் கால்கள் முனிவரை தாக்க, முனிவர், “மரண அவத்தையில் இருந்த முனிவரின் வலி கூட, மரண அவத்தையில் இருக்கும் என்னை தாக்கிய அந்த கொடூரமானவன், நாளை சூரியன் உதிக்கும் வேளையில் மரணிக்கட்டும் என்று சாபம் அளித்து விடுகிறார்.

சீலாவதி சூரியனுக்கு வழங்கிய கட்டளை

இதனை கேட்ட ஷீலாவதி, அவரின் காலில் விழுந்து மன்றாடி வேண்ட, முனிவர் தன்னால் எதுவும் ஆகாது என மறுத்து விடுகிறார்.மாற்று உபாயம் சிந்தித்த சீலாவதி, “நான் கனவிலும் என் கணவனைத் தவிர, வேறு எந்த ஆண் மகனையும் நினையாத பதிவிரதையாக இருந்தால், இன்றோடு சூரியன் உதிக்காமல் போகட்டும்” என கூறி விடுகிறாள்.

அவளது வார்த்தைகள் அவ்வாறே பலித்தன. அடுத்த நாள், சூரியன் உதியாமல் போனது. பூமி எங்கும் இருளில் மூழ்கியது. காலை சடங்குகள்,  பூஜைகள் என எதுவும் நிகழாமல் இருந்தது.இதே நிலை தொடர்ந்தது. இருளின் கோரத்தாண்டவம் அதிகரித்தது. ராட்சதர்களின் சக்தி கூடியது, இயற்கை சமநிலை பாழானது. மக்களது வாழ்க்கை கடினமாகியது. அகிலம் பிரலயத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தது.

மும்மூர்த்திகளின் பூமியை நோக்கிய பயணம்

இவ்வாறு நாட்கள் தொடர தேவர்களும் மும்மூர்த்திகளும் செய்வதறியாது யோசித்து கொண்டு இருக்கும் நேரத்தில், ஷீலாவதியின் மானசீக தாயான அனுசுயாவின் எண்ணம் கடவுள்களுக்கு நினைவிற்கு வருகிறது. அவர்கள் உடனே, நாரத முனிவரை அழைத்து அனுசுயாவிடம்,ஷீலாவதியின் சாபத்தை திரும்ப பெற்றுக் கொள்ள, அவளை அணுகுமாறு கேட்டுக் கொள்ள, நாரதரும் அத்ரி முனிவரின் ஆசிரமத்திற்கு விரைகிறார்.

நாரத முனி ஆசிரமத்தை அடைந்ததும், அனுசுயாவின் முதல் கேள்வி முனிவரிடம், பூமி இருளில் மூழ்கிய காரணம் என்ன நாரதரே? என்று.

நாரத முனி நடந்ததை கூறி, நிலைமையை சரியாக்க, அனுசுயாவின் உதவியை நாடுகிறார்.நிலையை அறிந்த அனுசுயா, மும்மூர்த்திகளும், இப்போதே என் ஆசிரமத்திற்கு வருகை தந்தால், என்னால் இயன்றதை நான் செய்வேன் என்கிறார்.

அதன்படியே, வேறு வழி இல்லாமல் மும்மூர்த்திகளும், உலக நலனிற்காக, அனுசியாவின் ஆசிரமத்தை அடைந்தனர். அனுசுயா, அவர்களை வணங்கி, அவர்களிடமிருந்து மூன்று வரங்கள் வேண்டும் என கேட்கிறார். அதன் பின்னரே தன்னால் சீலாவதியிடம் வேண்ட முடியும் என கூற, மும்மூர்த்திகளும், அனுசுயா வேண்டும் மூன்று வரங்களையும் அளிப்ப்பதாக வாக்களிக்க, அனுசுயா சீலாவதியின் இருப்பிடம் நோக்கி விரைகிறாள்.

அனுசுயா – சீலாவதி சந்திப்பு

அனுசுயாவை கண்ட சீலாவதி, தனது மானசீக தாயை வணங்கி வரவேற்றாள். அனுசுயா, “மகளே! நீ செய்த காரியத்தால், உலகம் முழுதும் இருளில் கிடக்கிறது. மனித வாழ்வு கேள்வி குறியாக இருக்கிறது. பிரலயம் தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது.இருள் சக்திகளின் ஆற்பாட்டத்தால் இயற்கை அழிய துவங்கி விட்டது. நீ சூரியனுக்கு இட்ட சாபம் சரியானது அல்ல மகளே! நீ உனது சாபத்தை திரும்ப பெற்றுக் கொண்டு, சூரியன் உடனடியாக உதிக்குமாறு செய்வாயாக!என்று வேண்டுகிறாள்.

தாயே! சூரியன் உதித்தால், அதோடு எனது கணவனின் உயிர் பிரிந்து விடும், என் கணவரின் உயிரை காப்பாற்ற வேண்டியது எனது கடமை அல்லவா, நான் எவ்வாறு இதனை செய்ய முடியும் என கேட்கிறாள்.

அனுசுயா “மகளே! நமது கடமை மற்றும் சுயநலத்தில் பிற உயிர்களுக்கு தீங்க நிகழ கூடாது, அவ்வாறு செய்யப்படும் கடமையே தர்மம், நீ தர்மம் தவறுதல் ஆகாது, மேலும், உனது கணவரின் உயிரை காப்பாற்றும் கடமையை நான் ஏற்கிறேன், என்னை நம்பு, உடனே சூரியனை உதிக்க செய்! என்றாள்.

சீலாவதி, “தாயே! நான் தங்களின் மீது அது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். எனது தாய்க்கு ஈடான உங்களுடைய அறிவுருத்தலை ஏற்று, நான் செய்த தவறை நானே சரி செய்கிறேன், என்று தனது பதிவிரதை தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து சூரியனை உதிக்க செய்கிறாள்.

சூரிய உதயம்

சூரியன் பிரகாசமாக வானில் உதித்த அதே தருணம் பூமி எங்கும் மகிழ்ச்சி பொங்க, அனுசுயா சோக கடலிள் வீழ்ந்தாள், அவளது கணவரின் உயிரும் பிரிந்தது.

அனுசுயா பெற்ற வரங்கள்

உடனடியாக, தனது ஆசிரமத்திற்கு விரைந்த அனுசியா, அங்கு காத்துக் கொண்டிருக்கும் மும்மூர்த்திகளிடம் தனது மூன்று வரங்களை கேட்கிறாள். முதல் வரம் சீலாவதியின் கணவன் உயிர்த்தெழ வேண்டும். இரண்டாவது வரம் அவனது உடல் குறைகள் மற்றும் முதுமை நீங்கி அழகிய ஆண்மகனாக, தனது மனைவியின் மீது மிகுந்த பாசமும், காதலும் கொண்ட கணவனாக, அவளைகண்ணை இமை காப்பது போல காக்கும் காவலனாக மாற வேண்டும் என்று முதல் இரண்டு வரங்களை கேட்டு முடித்தார்.

மும்மூர்த்திகளும் அப்படியே ஆகட்டும் என்கிறார்கள். முதல் இரண்டு வரங்கள் வழங்கி ஆயிற்று.மூவரும், மூன்றாவது வரம் என்ன வேண்டும் தாயே! என கேட்க, தாங்கள் கேட்டது அவ்வாறே நிகழ வேண்டும், மும்மூர்த்திகள் மூவரும் எனது வயிற்றில் குழந்தைகளாக பிறக்க வேண்டும், என தனது மூன்றாவது வரத்தை கேட்கிறாள் அனுசுயா.

காரணம் இன்றி எந்த காரியமும் நிகழ்வதில்லை. மும்மூர்த்திகளும் மனிதர்களாக பூலோகத்தில் பிறக்க வேண்டும் என்பது விதிக்கப் பட்டதே. அதற்கான தருணமே நிகழ்வுகளை நடத்துகிறது.

அனைத்தும் அறிந்த மூன்று கடவுள்களும், அனுசியா செய்த உதவியை காட்டிலும், அவளது தாயுள்ளத்திற்கு மதிப்பளித்து, அவரது வேண்டுதல் நிறைவேரட்டும் என்று வரமளித்தனர்.

அதன்படி பிரம்மாவின் ரூபமாக, சந்திரர் முதல் குழந்தையாக அனுசுயாவின் வயிற்றில் பிறப்பார். அதனைத் தொடர்ந்து விஷ்ணு பகவான் மற்றும் சிவ பகவான் அடுத்தடுத்த குழந்தைகளாக பிறப்போம் என உரைக்கின்றனர்.

சந்திர பகவானின் தோன்றல்

இவ்வாறு சந்திர பகவானின் பிறப்பு அத்ரி முனிவரின் ஆசிரமத்தில் நிகழ்கிறது. அத்ரி முனிவர் மற்றும் அனுசுயா தம்பதியினர் அளவில்லா ஆனந்தத்தை அடைகின்றனர். அனுசுயா பூரண நிலவாகிய சந்திர பகவானை பெற்றெடுக்கிறார்.

Author

Leave a reply

Stay Informed With the Latest & Most Important News

I consent to receive newsletter via email. For further information, please review our Privacy Policy

Loading Next Post...
Follow
Sign In/Sign Up Search 0 Cart
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...

Cart
Cart updating

ShopYour cart is currently is empty. You could visit our shop and start shopping.